tamilnadu

img

அவதூறுகளையும் எதிர்கொண்டு முன்னேறுவோம்!-அருணன்

கம்யூனிஸ்டு என்பதைக் கைவிடுவது “வரலாற்றுச் சுமையிலிருந்து” இந்திய கம்யூனிஸ்டுகளை விடுவிக்கும் என்கிறார் சமஸ் தனது பங்கிற்கு! லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ ஆகியோரிடம் “முன்னுதாரணங்களை” தேடக் கூடாது என்கிறார். அதாவது கம்யூனிசத்தின் வாடையே இருக்கக் கூடாது என்கிறார்! எதற்கு? கம்யூனிஸ்டுகள் வளர! தமிழ் வளர வேண்டும் என்றால் தமிழில் பேசாதே என்ற கதையாக உள்ளது! ஏகாதிபத்தியத்தை, பாசிசத்தை எதிர்க்க இந்த மகத்தான தலைவர்களிடமிருந்து பாடம் பெறக் கூடாது என்பது அந்த எதிர்ப்பைக் கைவிடச் சொல்வதற்கு ஒப்பாகும். 

“அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்” எனும் தனது கட்டுரையில் எமது இயக்கத்தின் சாதனைகள் சிலவற்றை உணர்வுப்பூர்வமாக விவரித்திருக்கிறார் சமஸ். அவ்வாறே எமது தோழர் என். சங்கரய்யா அவர்களது  வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டி, அதன் வழி எமது இயக்கத்தின் மகத்தான  தியாகங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். அதற்காக அவருக்கு எமது அன்பான நன்றி. அதேநேரத்தில், பொதுவுடைமை இயக்கத்தின் எதிர்காலம் பற்றி அவர் பேசியிருக்கும் தொனியும்சரி, அவர் தந்தி ருக்கும் ஆலோசனைகளும்சரி இதே உணர்வு நிலையில் இல்லை. அதில் உள்ளார்ந்த கேலியும், வெளிப்படையான அவதூறுகளும் உள்ளன. இதை வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பொருளாதாரம், மதம், தேசியம், அரசியல் ஆகிய வற்றை அணுகுவதில் “பெரிய தடுமாற்றம்” உள்ளது என்கிறார். அப்படி என்ன பெரிய தடுமாற்றத்தைக் கண்டார்? உலகமயமாக்கல் என்கிற பெயரில் பொதுத்துறையை ஒழிக்காதீர்கள் எனச் சொன்னோம். காந்தி போன்ற தலைவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும் என்கிறார். அவர் தந்த பிரதமராம் நேரு உருவாக்கிய “நவீன கோயில்கள்” பொதுத்துறை நிறுவன ங்கள். அவற்றை விற்றார்களே, ரயிலையும் விற்கிறார்களே! பொருளாதார நிலைத் தன்மைக்கு மட்டுமல்ல சமூகநீதி வழங்கவும் பொதுத்துறை வேண்டும் எனச் சொன்னது..சொல்வது பொதுவுடைவாதிகள்தானே! இதற்குப் பெயர் தடுமாற்றமா? பல தேசியஇனங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்பதில்லை பாஜகவினர். இது ஒரே நாடு என்பதை ஏற்பதில்லை பிரிவினைவாதிகள்.

பொதுவுடைமைவாதிகள் தாம் இந்தியாவின் பன்மைத் தன்மையையும் ஒற்றுமை யையும் ஒருங்கே ஏற்பவர்கள். அதனால்தான் மத்தியில் உண்மையான கூட்டாட்சியும் மாநிலங்களில் உண்மையான சுயாட்சியும் வேண்டும் என்கிறார்கள். இந்தியாவின் தேசிய இனப் பிரச்சனைக்கு இதை விட்டால் வேறு தீர்வு இல்லை என்பதை நித்தம் வாழ்வு காண்பிக்கிறது. ஜம்மு-காஷ் மீரின் 370 நீக்கத்தையும் மாநில அந்தஸ்து பறிப்பையும் உறுதி யாக எதிர்ப்பவர்கள் பொதுவுடைமைவாதிகளன்றோ! இதற்குப் பெயர் தடுமாற்றமா? பல மதங்களைக் கொண்ட நாடு என்பதால் மட்டுமல்ல, மதம் மக்களின் தனிவாழ்வாக இருக்க அரசு இயல் அவர்க ளின் பொது வாழ்வாக இருப்பதாலும் இந்தியாவின் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டியுள்ளது. மக்களின் மத உரி மையையும், அவர்கள் மத்தியில் நிலவ வேண்டிய நல்லி ணக்கத்தையும் வற்புறுத்துகிறவர்கள் பொதுவுடைமை வாதிகள். “மதம் மக்களுக்கு அபின்” என்று மட்டும் சொல்லி நிறுத்தவில்லை மாமேதை மார்க்ஸ் “அது ஏழைகளின் பெருமூச்சாக, இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது” என்றார். மண்ணுலகில் மெய்யான சொர்க்கம் படைக்கப் படும்வரை விண்ணுலகின் கற்பனையான சொர்க்கத்தை மக்கள் விட்டுவிட மாட்டார்கள் என்பதை உணர்ந்திருப்ப வர்கள் பொதுவுடைமைவாதிகளே. அதனால்தான் மத நம்பிக்கையாளர்கள்பால் நாங்கள் பதமான அணுகுமுறை யைக் கொண்டிருக்கிறோம்.

எங்களது எதிர்ப்பு எல்லாம் மத வெறியர்களை நோக்கித்தான். இதற்குப் பெயர் தடுமாற்றமா? அரசியல் எனப்பட்டதில் ஜனநாயகம் காக்கப் போராடி யது யார்? அவசரநிலை ஆட்சி காலத்தை எதிர்த்து நின்றதால் மார்க்சிய பொதுவுடைமைவாதிகள் எதிர்கொண்ட அடக்குமுறையை வரலாறு நன்கு அறியும். ஆனால் அதைக் கொண்டுவந்த காங்கிரசைக் காட்டிலும் ஆபத்தான சக்தியாக மதவெறி பாஜக எழுந்த போது அதை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகளை அணிசேர்க்க முயன்றதும் அதே மார்க்சியர்களே. அந்த அரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட எம் தோழர்களாம் சுர்ஜித்துக்கும் ஜோதிபாசுவுக்கும் ஈடுஇணை யார்? அன்றுமட்டுமல்ல இன்றும் பாஜக உள்ளிட்ட சங்பரிவாரத்தை கொள்கைரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் உறுதியாக எதிர்த்து நிற்பது பொதுவுடைமைவா திகளே. இதில் களப்பலியான தோழர்கள் பல நூறு பேர். பொதுவுடைமை இயக்கம் போன்ற ஓர் உன்னத இயக்கத்தை தேர்தல் தோல்வியை வைத்து மட்டுமே எடைபோடவும் கூடாது, அதனாலேயே கொள்கைரீதியாக அது பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது என்று முடிவுகட்டவும் கூடாது. அப்படி முடிவு கட்டினால் அதன் தலைகீழும் உண்மை யாகிப் போகும். அதாவது பாஜக தேர்தலில் பெரு வெற்றி பெற்றிருப்பதால் அதன் மதவெறிக் கொள்கைகள் எல்லாம் மகா அற்புதமானவை என்று முடிவுகட்ட வேண்டியிருக்கும்! இதன் பொருள் தேர்தல் வெற்றி தோல்விகளைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல.

எமது எதிரிகள் வர்க்கரீதியாகவும் சமூக ரீதியாகவும் காலங்காலமாக மகா பலவான்கள். அவர்களை வெல்வது எளிதானது அல்ல. ஆனாலும் அவர்களது தோல்வி யிலும் எங்களது வெற்றியிலுமே இந்திய மக்களின் கதி மோட்சம் இருக்கிறது. ஆகவே அதை நோக்கிய பயணமும், இலக்கை அடைதலும் நிச்சயம் நடக்கவே செய்யும். இதற்கான நல் ஆலோசனைகளை சமஸ் போன்ற வர்கள் கொடுத்தால் நாங்கள் அவசியம் பரிசீலிப்போம். ஆனால் அவரோ வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா சொன்ன தையே திரும்பக் கூறுகிறார். அதாவது “கம்யூனிசத்தை” கைவிட்டுவிட்டு “சோசலிசத்தை” ஏற்கவேண்டும் என்கிறார். கம்யூனிஸ்டுகள் முன்னேற ஒரே வழி கம்யூனிசத்தை கைவிடுவதாம்! வளர்ச்சிக்கு வழி கேட்டால் தற்கொலைக்கு வழி சொல்கிறார்! அதுசரி இந்தியாவில் சோசலிஸ்டுகள் மட்டும் வளர்ந்து விட்டார்களா என்ன? அவர்களையும் பின்னுக்குத் தள்ளியல்லவா, வகுப்புவாத பாஜக முன்னேறியிருக்கிறது! கம்யூனிஸ்டு என்பதைக் கைவிடுவது “வரலாற்றுச் சுமையிலிருந்து” இந்திய கம்யூனிஸ்டுகளை விடுவிக்கும் என்கிறார் சமஸ் தனது பங்கிற்கு! லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ ஆகியோரிடம் “முன்னுதார ணங்களை” தேடக் கூடாது என்கிறார். அதாவது கம்யூனி சத்தின் வாடையே இருக்கக் கூடாது என்கிறார்! எதற்கு? கம்யூ னிஸ்டுகள் வளர! தமிழ் வளர வேண்டும் என்றால் தமிழில் பேசாதே என்ற கதையாக உள்ளது! ஏகாதிபத்தியத்தை, பாசிசத்தை எதிர்க்க இந்த மகத்தான தலைவர்களிடமிருந்து பாடம் பெறக் கூடாது என்பது அந்த எதிர்ப்பைக் கைவிடச் சொல்வதற்கு ஒப்பாகும்.

அப்புறம், கம்யூனிசம் தேவைக்கேற்ற பலன்களைத் தரச் சொல்கிறது, சோசலிசம்தான் உழைப்பிற்கேற்ற பலன்க ளைத் தரச் சொல்கிறது என்கிறார். அதனால்தான் கம்யூ னிசத்தை இறுதி லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள் கம்யூ னிஸ்டுகள். அதற்கு முந்திய கட்டம்தான் சோசலிசம். இந்தியா இன்னும் அந்தக் கட்டத்திற்கும் தயாராக இல்லை என்பதால் தான் மக்கள் ஜனநாயகம் எனும் அதற்கும் முந்திய கட்டத்தை எட்ட வேண்டும் என்கிறார்கள். இதையெல்லாம் அறியாமல் சமஸ் எழுதிச் செல்வது வினோதமாக இருக்கிறது. ஆனானப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியே “எமது நாடு இன்னும் சோசலிசத்தின் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது” என்று வரையறுத்துள்ளது. மார்க்சியம் யதார்த்தப்பூர்வ மானது. ஒருகாலகட்டத்திய சொந்த பலத்தையும் எதிரியின் பலத்தையும் அவதானித்தே உழைப்பாளி வர்க்கம் முன்னேற வேண்டும் என்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனா மீது எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறது என்பது சமஸ் அறியாதது அல்ல. அதனுடைய பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே நம்புவது ஏகாதிபத்திய வலையில் வீழ்வதாகும். ஹாங்காங் பிரச்சனையும் காஷ்மீர் பிரச்சனையும் ஒன்று, ஜீ ஜின்பிங்கை “தோழர்” என்று அழைக்கக் கூடாது என்கிறார். ஹாங்காங் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டிருந்த சீன பூமி. அங்கு அனைவரும் சீனர்கள்.

அதை சொந்தம் கொண்டாட சகல உரிமையும் சீனாவுக்கு இருந்தது. ஆனாலும் “ஒரே நாடு இரண்டு வாழ்வுமுறைகள்” என்று ஒப்பந்தம் போட்டே அதை மீட்டது சீனா; படை அனுப்பி அல்ல! மகாவ் எனும் தீவும் இப்படித்தான். அண்மையில் நான் அங்கு பயணித்தபோது பெரும் சூதாட்டக் கூடங்களைக் கண்டேன். அப்படி சீனத் தலைநகரம் பெய்ஜிங்கில் இல்லை. இரண்டு வாழ்வுமுறைகள் என்பது புரிகிறதா? சமீபத்தில் ஹாங்காங் விஷயமாக சீனா எடுத்த ஒருசில நடவடிக்கை களுக்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியதும், அவற்றை கை விட்டுள்ளது அரசு. ஆனால் அதைச் சாக்கிட்டு ஹாங்காங் கை தனி நாடாக்க வேண்டும் என்று பிரிவினைவாதம் பேசு கிறது ஒரு கோஷ்டி. அதை எப்படி சீன ஜனாதிபதியால் ஏற்க முடியும்? அதைத்தான் ஜின்பிங் நேபாளத்தில் குறிப்பிட் டார். அதற்காக அவரைத் “தோழர்” என்று அழைக்கக் கூடாது என்றால் அதை எம்மால் ஏற்க முடியாது. காரணம் “சீனத்தைக் காட்டிலும் பிரிட்டன் கூடுதல் இடதுசாரித்தன்மை உள்ளது” எனும் பிரிட்டீஷ் பக்தராக இருக்கிறார் கூறுகிறவர்! நாடுகள் பல, மனிதகுலம் ஒன்று. இந்த இரட்டை உண்மையை மனதில் கொண்டதே மார்க்சியம். உலக வரலாற்றை மனதில் கொண்டு இந்தியாவுக்கான பாதையில் கம்யூனிஸ்டுகள் நடைபோடுகிறார்கள். பள்ளம் மேடுள்ள பாதைதான், அதில் பார்த்து நடக்க வேண்டியதுதான். அதற்காகத் தங்களின் பயணத்தை நிறுத்த மாட்டார்கள். “எவ்வளவோ வேட்டையாடப்பட்டும் பொதுவுடைமை இயக்கம் நீடித்து நிற்கக் காரணம் கம்யூனிஸ்டுகள் செய்தி ருக்கும் தியாகங்கள்” என்றார் சங்கரய்யா என்று குறிப்பிட்டுள் ளார் சமஸ். அடக்குமுறைகளை மட்டுமல்ல அவதூறு களையும் அப்படியாகவே எதிர்கொண்டு முன்னேறுவோம்.